புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த பாரத மண்டபத்தின் முகப்பில் உலகின் ஆகப் பெரிய நடராசர் சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்தச் சிலையை வடித்த சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதாகிருஷ்ணன் டெல்லியில் கௌரவிக்கப்பட்டார்.
இந்தச் சிலையை தமிழகத்தின் சுவாமிமலையைச் சேர்ந்த சிற்பி ராதா கிருஷ்ண ஸ்தபதி தலைமையிலான குழுவினர் வடித்துத் தந்தனர். இந்தச் சிலை அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்து, சிலையின் தத்துவம் குறித்த விவரங்கள் பேசுபொருளாகின.
பாரத மண்டபத்தில் நடராசர் சிலையை நிறுவுவதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முக்கியப் பங்கு வகித்தது.
இந்நிலையில், இளைய தலைமுறையினருக்கு ‘நடராசர்’ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் புதுடெல்லியில் டாக்டர் அம்பேத்கர் அனைத்துலக மையத்தில் ‘நடராசர்: பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் நடராசர் சிலையை உருவாக்கிய ராதாகிருஷ்ண ஸ்தபதி உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
சிற்பி ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் சிற்ப சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அளவீடுகளைப் பயன்படுத்தி, கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதல் சோழர் காலத்திலிருந்து நடராசர் தயாரிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மெழுகுவார்ப்புச் செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கினர் என்று கூறினார்.