இம்பால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கலைக்க முயன்றதில் வியாழக்கிழமை குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை ஆயுதமேந்திய கும்பல் ஆளும் அரசியல் கட்சியின் அலுவலகத்தை சேதப்படுத்தியது, இரண்டு காவல்நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதை அடுத்து நிலைமை அங்கு மிகவும் பதற்றமாக இருப்பதாக மற்றொரு காவல் அதிகாரி கூறினார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகரில் உள்ள வீட்டில் முதல்வர் என். பிரேன் சிங்கும் அவரது குடும்பத்தினரும் வசிக்காத போதிலும் இவ்வீட்டை வியாழன் இரவு கும்பல் தாக்க முயன்றதாக மணிப்பூரின் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்பால் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு போடப்பட்டுள்ள சூழலிலும் தாக்குதல் நடத்த முயன்ற போராட்டக்காரர்களை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு காவலர்கள் விரட்டியடித்தனர்.
கும்பல் தாக்க முயன்ற இல்லம் மணிப்பூர் முதல்வர் தற்போது வசிக்கும் இல்லம் அல்ல என்றும் மாறாக அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பரம்பரை வீடு என்றும் அந்த வீட்டில் இப்போது யாரும் வசிக்கவில்லை என்பதால் மோசமான பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மணிப்பூர் முதல்வர் தற்போது வசிக்கும்இல்லம் தாக்கப்பட்டதாக இணையத்தில் பரவிய தகவல்களை மணிப்பூர் காவலர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “இம்பாலில் உள்ள ஹெய்ங்காங் பகுதியில் உள்ள முதல்வரின் குடும்பச் சொத்தாக இருக்கும் வீட்டைத் தாக்கும் முயற்சி நடந்தது.
இருப்பினும், அந்த வீட்டில் இருந்து 100-150 மீட்டர் தொலைவிலேயே அந்த கும்பலைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
“வீட்டில் யாரும் இல்லை என்றபோதிலும் அங்கும் 24 மணி நேரமும் காவல் போடப்பட்டுள்ளது. இரு வேறு திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இருப்பினும், அதை வெற்றிகரமாக முறியடித்து விட்டோம்,” என்று தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை உச்சமடைந்து வருகிறது.
புதிய கலவரத்தால் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடிக்கத் தொடங்கிய இருப்பதால், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.