ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் கடைசி நாளில் விநாயகர் லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். லட்டை ஏலம் எடுப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்தச் சூழலில், இவ்வாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு வியாழனன்று ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போனது.
கடந்த ஆண்டு லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம்போன நிலையில், இந்த முறை இருமடங்காக ஏலம் எடுத்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம்போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள லட்டை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.