புதுடெல்லி: டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் தன் விமானத்தின் படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.
பிரான்சின் துலூஸ் நகரில் விமானப் பட்டறையில் ஏ350 ரக விமானம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களை ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் ஏர் இந்தியா சனிக்கிழமை பதிவிட்டது. அந்த விமானம் குளிர்காலத்தில் இந்தியா வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன் சின்னத்தை மாற்றியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா அதன் புதிய சின்னத்தையும் நிறத் திட்டத்தையும் கடந்த ஆகஸ்ட்டில் வெளியிட்டது.
ஏர் இந்தியாவுக்கே உரிய மகாராஜா சின்னத்தின் நவீன தோற்றத்தைப் புதிய சின்னம் சித்திரிக்கிறது.
புதிய சின்னத்தைத் தொடங்கிவைத்த டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், அது ‘எல்லையற்ற சாத்தியங்களை’க் குறிப்பதாகக் கருத்துரைத்தார்.