பெங்களூரு: பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது.
இதனால், சாலைகளில் கரைபுரண்டு ஓடிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த சில நாள்களாக கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கட்கிழமையும் பெங்களூரில் தொடர்ந்து கனமழை பெய்தது. மாலை 4 மணி அளவில் பெய்யத் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சுரங்கச் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதையடுத்து, பெங்களூரின் பல பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், வருகிற 21ஆம் தேதி வரை கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.