திருமலை: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் இன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான சந்திரபாபு நாயுடு இப்போது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான அவர், கடந்த 45 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திரா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜமுந்திரியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சந்திரபாபு நாயுடு இனிமேல் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடக்க வேண்டியதுதான் என்று முன்னாள் நடிகையான ரோஜா கூறினார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சி நடந்தபோது திறன் மேம்பாட்டு நிதியில் பல கோடி ரூபாயை அவர் தவறாகக் கையாண்டு இருக்கிறார்.
இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால்தான் அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.
இது தவிர அவருக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு இதே கதிதான் ஏற்படும். அவருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் வருமான வரித்துறை, பொருளியல் குற்றப் பிரிவு துறை போன்ற அமைப்புகளால் தொடரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் ரோஜா கூறினார்.
இதனிடையே, ராஜமுந்திரி சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
சிறையில் இருக்கும் தனக்கும் வெளியில் இருக்கும் தன் குடும்பத்தாருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக அவர் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.