சூரத்: பிறந்து நான்கு நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, தன் உறுப்புகளைத் தானம் வழங்கி நான்கு இளம் உயிர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
குழந்தை இறந்து பிறந்ததால் அதன் பெற்றோர் அனுப்-வந்தனா தாக்கூருக்கு சிரமமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தனர். குழந்தை மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அதன் உறுப்புகளைத் தானம் வழங்க பெற்றோர் முடிவெடுத்தனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 23ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் அக்குழந்தை பிறந்தது. மூளைச்சாவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள், விழி வெண்படலம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.
‘ஸ்கேன்’ பரிசோதனைக்காக மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற அனுப் தாக்கூருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையைப் பெற்றெடுக்க உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அனுப் மனைவி வந்தனாவுக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தையிடம் வழக்கமான இதயத்துடிப்பில் 15 விழுக்காடு மட்டுமே தென்பட்டது. அது மூச்சுவிடவோ அழவோ அசையவோ இல்லை.
இரண்டு நாள் கண்காணிப்புக்குப் பிறகு, அக்குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கைக்குழந்தைகளின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இருப்பது பற்றிக் கேள்விப்பட்டிருந்த அனுப்-வந்தனா தம்பதியர், தங்கள் பெற்றோரின் ஒப்புதலின்படி குழந்தையின் உறுப்புகளைத் தானம் செய்ய முடிவெடுத்தனர்.
“அவர்களின் தன்னலமற்ற கனிவன்பு, பல உயிர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது,” என்று ஜீவன்தீப் உறுப்பு தான அறுநிறுவன அறங்காவலர் தலைவர் விபுல் தலவியா கூறினார்.