பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரின் தெற்குப் பகுதியில் உள்ள வீரபத்திரா நகரில் உள்ள பணிமனை ஒன்றில் 30க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் பணிமனையில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தீப்பற்றியது.
அந்தத் தீ அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுக்குப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதனால் ஏற்பட்ட கரும்புகை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்த விபத்தில் 18 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் ஒவ்வொன்றாக தீக்கிரையாவதைக் கண்ட பணிமனை ஊழியர்கள் தங்களால் முடிந்தளவு பேருந்துகளை தீப்பிடிக்காமல் பணிமனையிலிருந்து வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், தீயின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், அவர்கள் பேருந்துகளை அப்படியே விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஏழு தீயணைப்பு வாகனங்களுடன் கிட்டத்தட்ட 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அந்தப் பணிமனையில் பேருந்துகளைப் பழுதுபார்க்கும் வேலைகளைச் செய்துவரும் எஸ்.வி.கோச் ஒர்க்ஸ் என்னும் பட்டறையில் ஏற்பட்ட தீ, பேருந்துகளுக்குப் பரவியதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்துக்கு பட்டறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேரில் வருகை தந்து பார்வையிட்டார்.
பெங்களூரில் இந்த ஒரு மாதத்திற்குள் நடக்கும் நான்காவது பெரிய தீ விபத்து இதுவாகும்.
சில நாள்களுக்கு முன்னர் அத்திப்பள்ளி என்னுமிடத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கோரமங்கலா என்னுமிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரில் அடிக்கடி தீவிபத்து நடப்பதைத் தடுக்கும் வகையில் தீ மற்றும் அவசர சேவைகள் துறை அதிரடி திட்டம் ஒன்றை அறிவிக்க உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.