புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 74 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது, சென்ற 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22 விழுக்காடு எனச் சொல்லப்படுகிறது.
உலக உணவு தானிய உற்பத்தியில் 8%, அதாவது 93.1 கோடி டன் உணவு வீணாவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் (ஐசிஏஆர்) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் உணவு இழப்பை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் இது பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாட்டு நிறுவனச் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) ‘உணவுக்கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021’ன்படி, உலகளவில் உணவுப்பொருள்கள் கழிவுகளாக வீணடிக்கப்
படுவதற்கு குடும்பங்கள், உணவுச் சேவைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவை முக்கியக் காரணங்கள் என்று கூறப்படுகிறது
உலகளவில் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு 121 கிலோ உணவைப் பயன்படுத்தும் நிலையில் வீணடிக்கின்றனர். இதில், வீடுகளில் மட்டுமே 74 கிலோ உணவுப்பொருள்கள் வீணடிக்கப்படுகிறது.
அதன்படி, இந்தியாவில் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார். இருப்பினும், இது தெற்காசியாவிலேயே மிகவும் குறைந்தபட்ச அளவு.
மாறாக, 28 விழுக்காட்டு வேளாண் நிலங்கள் ஒருபோதும் சாப்பிட முடியாத அல்லது வீணடிக்க முடியாத உணவுகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் மற்றும் ஜெர்மனியின் துநென் நிலையம் இணைந்து, புதன்கிழமை தொடங்கிய இந்த மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கருத்தரங்கின் தொடக்க நாளில் ஐசிஏஆர் தலைவர் ஹிமான்ஷு பதக் கூறுகையில், “உணவு வீீணாவதற்கு, சேமிப்பு வசதிகள் இல்லாததே முக்கியக் காரணம். புள்ளிவிவரங்களின் மூலம் அறிந்துகொண்டதன் அடிப்படையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டும் கவனத்தைவிட, அதனைப் பாதுகாப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.
“ஏனெனில், உணவு வீணாவது பொருளியல் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி, தனிமனித நலத்தையும் காலநிலையையும் பாதிப்பதாகவும் அமைகின்றன,” என்று சொன்னார்.