புதுடெல்லி: சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றாமல் பொதுமக்கள் கடந்து சென்றதும் அவரது கைப்பேசி, கேமரா உள்ளிட்டவை திருடப்பட்டதும் தெரியவந்துள்ளதாக இந்தியா டுடே ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் பியுஷ் பால். முப்பது வயதான ஆவணப்பட இயக்குநரான இவர், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
தெற்கு டெல்லியில் உள்ள பஞ்சசீல் பகுதியில் பியுஷ் பாலின் வாகனம் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியது. இதில் வாகனமோட்டிகள் இருவரும் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர்.
சாலையோரம் விழுந்த பியூஷ் பால் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
“விபத்து நிகழ்ந்த அரைமணி நேரத்துக்குப் பிறகே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘பைக் டாக்சி’ ஓட்டுநர் ஒருவர் உதவியதை அடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி பியுஷ் உயிரிழந்தார்,” என்று அவரது நண்பர் சந்தோஷ் போஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருபது நிமிடங்கள் பியுஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபோதும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் விபத்துப் பகுதியை காணொளியாகப் பதிவு செய்வதில் மட்டுமே மக்கள் ஆர்வம் காட்டினர் என்றும் அந்த நண்பர் கண்ணீருடன் குறிப்பிட்டார்.
“பொதுமக்கள் சரியான நேரத்தில் அவருக்கு உதவியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். பியுஷிடம் இருந்து கைப்பேசி, கேமரா ஆகியவற்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளனர்,” என்றார் அந்த நண்பர்.
விபத்துப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் இந்த விபத்துக் காட்சி பதிவாகி உள்ளது.