மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மோசடி வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட எட்டு வங்கிகளிடம் இருந்து நிறுவனத்தின் பேரில் கோயல் ரூ.5,716 கோடி கடன் பெற்று, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த பணமோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த பின், வங்கியில் இருந்து நிறுவனத்திற்காக கோயல் பெற்ற பெருந்தொகையை மடைமாற்றியுள்ளார் என்பதை நிரூபிக்கும் ஆதராங்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டது.
இதுதொடர்பாக கோயல் குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
கோயல், அவரது மனைவி அனிதா கோயல், அவர்களது மகன் நிவான் கோயல் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 17 சொத்துகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னணி இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இழப்பைச் சந்தித்தது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமானச் சேவையை முழுமையாக நிறுத்தியது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்த மே மாதம் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தியது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.