புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தர நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுப்பு விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபல் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த ஊடகப் பேட்டியில், “இந்தச் சூழ்நிலையில் அரசு, கட்டுமானப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை டெல்லிக்குள் தடை செய்வது, பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ்4 டீசல் வாகங்களுக்கான தடையை அமல்படுத்துவது, குப்பைகள் மற்றும் பயோமாஸ்க்குகளை எரிப்பது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கடுமையான காற்று மாசு காரணமாக இலங்கை, பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிகளின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகளும் திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு டெல்லி விளையாட்டரங்கில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆட்டத்தில் மோதுகின்றன.
காற்றுத் தரம் மோசமாக இருந்தால் ஆட்டம் கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.