புதுடெல்லி: மாநிலங்களில் ஆளுநராகப் பதவியில் அமர்த்தப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகள் அல்லர். அவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களும் அல்லர். எனவே, மாநில அரசுகள் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் சட்ட முன்வரைவு நகலுக்கு ஒப்புதல் தரவேண்டியது அவர்களது கடமை.
ஆளுநர்களால் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர்கள், சட்ட முன்வரைவை கிடப்பில் போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பன்வாரிலால் புரோகித் ஆளுநராக அமர்த்தப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபின் சட்டப்பேரவையில் 27 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவற்றில் 22க்கு மட்டுமே ஆளுநர் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், பல்வேறு சட்ட முன்வரைவுகள் ஆளுநர் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்க அவர் சுணக்கம் காட்டுகிறார் என்று பஞ்சாப் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் குழு திங்கட்கிழமை விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளனர்.
“இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இதற்கு முன்பு, தெலுங்கானா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகுதான், கிடப்பில் போடப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதுபோன்ற செயல்களுக்கு முடிவு ஏற்பட வேண்டும்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“மாநிலங்களின் சட்ட முன்வரைவுகளை ஆய்வு செய்வதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே ஆளுநர்கள் அவற்றுக்கு ஒப்புதல் தரவேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
“ஆளுநர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் தங்களின் நிலை குறித்து நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.”
தமிழ்நாடு: ‘‘பஞ்சாப் அரசின் மனுவுடன், கேரளா, தமிழ்நாடு அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் 10ஆம் தேதி விசாரணை நடைபெறும்,’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா: இதுபோல, கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் எட்டுக்கும் மேற்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் தரவில்லை என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.