புதுடெல்லி: அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவந்தது. இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்று போலி காணொளிகளைப் பரப்புபவர்களுக்கு மூன்றாண்டுச் சிறை தண்டனையும் ரூ.1.லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஜாரா படேல் மிகவும் பிரபலம். இங்கிலாந்துவாழ் இந்தியரான ஜாரா படேல், கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சிலர் அந்தக் காணொளியில், அவரது முகத்துக்குப் பதிலாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி காணொளி உருவாக்கி பரப்பியுள்ளனர்.
இதுபோன்ற போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு சமூக வலைத்தளவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி காணொளிகள், புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66டி-யின்படி 3 ஆண்டுச் சிறைத் தண்டனையுடன் அபராதமாக ரூ.1 லட்சமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் அதுபோன்ற காணொளியை நீக்க வேண்டும் என்று சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து ஒரு பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், 2013 ஏப்ரலில் அமல்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி, பயனாளர் தவறான தகவலைப் பதிவிடாமல் இருப்பதை உறுதி செய்தல், அவ்வாறு வெளியிடப்பட்ட தவறான தகவல்கள் அரசாங்கம் அல்லது பாதிக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவரோ அதுகுறித்து புகார் செய்தால், புகாரளித்த 36 மணி நேரத்தில் அந்த பொய்த் தகவல் சமூக ஊடகங்களில் நீக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சமூக ஊடகங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது பரவி வரும் போலிப் படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்புவது மிகவும் ஆபத்தானவை என்றார் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அவற்றைப் பயன்படுத்தி பிரபலங்களின் போலி புகைப்படங்கள், காணொளிகளை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப் ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன.