ராய்ப்பூர்: “சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் குறித்த அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. இவை அனைத்தும் பாஜகவின் தேர்தல் பிரசாரங்களின் ஒருபகுதியே ஆகும்,” என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தொடர்பான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பதற்காக அரசு அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாஜகவின் தேர்தல் பிரிவான அமலாக்கத்துறை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்கிறது. என்ன வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சொல்கிறது.
தேர்தல் சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகள் முடுக்கிவிடப் படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்.
ஆட்சிக்கு வந்த 2018ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி பாடுபட்டு வருகிறது. 2018ல் பெற்ற வெற்றியைப் போல மிகப்பெரிய வெற்றியை சத்தீஸ்கரில் இந்தத் தேர்தலில் பெறுவோம்,” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நவம்.2ஆம் தேதி சத்தீஸ்கரில் பல இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேலுக்கு மகாதேவ், சூதாட்டச் செயலி நிறுவனத்திடம் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.
சத்தீஸ்கர் 90 தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இங்கு நவம்.7-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவும், நவம்.17-ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.