புதுடெல்லி: கலப்பட உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்து உள்ளது.
நடப்பில் உள்ள சட்ட விதிகளின்படி கலப்பட உணவை விற்பனை செய்வோருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் சில சமயங்களில் விதிக்கப்படுகிறது.
ஆனால், கலப்பட உணவுக் குற்றவாளிகளுக்கு இந்த அபராதத் தொகை போதாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ்லால் கூறுகையில், “கலப்பட உணவால் பொதுமக்கள் உடல்நலனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்தகைய உணவை விற்பனை செய்வோருக்குத் தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் தண்டனையை உயா்த்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
மேலும் பாரதிய நியாய சம்ஹிதா 2023 மசோதாவின்கீழ் கலப்பட உணவு குற்றவாளிகள் ‘சமூக சேவை’ மேற்கொள்வதை ஒரு தண்டனையாக வழங்கும் சட்டத்தையும் நாடாளுமன்ற நிலைக்குழு வரவேற்றுள்ளது.