டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. அதில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க தற்போது வேறு ஒரு சுரங்கப்பாதை தோண்டப்பட்டு வருகிறது.
ஐந்தாவது நாளான வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தாய்லாந்தில் வெள்ளத்தின் போது குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்களை மீட்ட நிறுவனத்திடம் இந்தியா உதவி நாடியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குகைக்குள் 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிக்கியிருந்தனர். அவர்களை அந்த நிறுவனம் பத்திரமாக மீட்டது.
மேலும் இந்திய அதிகாரிகள் மண், கற்களை ஆராயும் நார்வே நிறுவனத்திடமும் உதவி கேட்டுள்ளனர்.
4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுரங்கத்தில் உள்ளே இருக்கும் 40 தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் தேவையான உணவு, தண்ணீர், மருந்துகள், உயிர்வாயு ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் சுரங்கத்தில் உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் உடல் நிலை குறித்து எந்த தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை.
இடிபாடு நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான சுரங்கப்பாதை 4.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. அது சார் தாம் நெடுச்சாலையின் ஒரு பகுதியாகும். கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் அந்த 890 கிலோமீட்டர் நெடுஞ்சாலை நான்கு இந்து வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாபெரும் திட்டங்களில் இதுவும் ஒன்று.