சென்னை: இந்திய ராணுவத்துக்காக மலைப் பகுதிகளில் உணவு கொண்டு செல்ல உதவும் டிரோன்களை (ஆளில்லா வானூர்தி) சென்னை எம்ஐடி நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில் இயங்கி வரும் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம், நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன் எனப்படும் ஆளில்லா வானூர்திகளை வடிவமைத்து இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக அனுப்பி வைத்தது.
அந்த வகையில் சுமார் 500 டிரோன்களை இந்திய ராணுவத்துக்கு அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த டிரோன்களை நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள எளிதாக அணுக முடியாத இடங்களில் இந்திய ராணுவம் பயன்படுத்தவுள்ளது.
இதையொட்டி உயர்ந்த மலைப் பகுதிகளான லே, லடாக், அடர்ந்த காடுகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகள், வெப்பம் அதிகம் இருக்கும் பொக்ரான் ஆகிய இடங்களில் டிரோன் சோதனைகள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இது தொடர்பாக எம்ஐடி நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூறும்போது, “இந்த ஆளில்லா வானூர்திகள், கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும்போதுகூட பயன்படுத்தும் வகையிலும், 1 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 100 கிலோ எடை கொண்ட இந்த டிரோன்கள், 15 முதல் 20 கிலோ வரையிலான மருந்துகள், உணவு, எண்ணெய் பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு 20 கி.மீ. வரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை,” என்று கூறினர்.