புதுடெல்லி: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாகவும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் வலியுறுத்தியுள்ளார். “இது ஒரு ஆத்திரமூட்டும் பேச்சு. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.” என திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ம.பி. உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “தேர்தலில் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், பாகிஸ்தானில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தேசத்துக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசியிருந்தார்.
அதனையடுத்து, அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்று பேசுவது நரோத்தம் மிஸ்ராவின் வழக்கம் என குற்றம் சாட்டிய திக் விஜய் சிங், மிஸ்ராவுக்கு எதிரான தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்கே அவருக்கு உரிமை இல்லை எனவும் கூறினார்.
முன்னதாக தாதியா என்னுமிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நரோத்தம் மிஸ்ரா, “வேறு கட்சி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் கொண்டாட்டம் நடைபெறும். எனவே, தேச நலனையே முதன்மையாகக் கருதி தாமரை (பாஜகவின் தேர்தல் சின்னம்) பொத்தானை அழுத்த வேண்டும். இது எல்லையில் ராணுவத்தைப் பலப்படுத்தும்,” என்றார்.
மேலும், பாஜக சின்னத்தின் பட்டனை அழுத்தினால் இலவச ரேஷன், வீடுகள், கொரோனா தடுப்பு மருந்துகள், நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு, வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்டவை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து நரோத்தம் மிஸ்ரா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.