புதுடெல்லி: விமானங்களைத் தாமதமாக இயக்குதல், சேவைகள் ரத்துச் செய்யப்படுதல், பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணம் செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பயணிகள் பலர் புகார் கூறியுள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நவம்பர் 3ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தது. ஏர்இந்தியா நிறுவனம் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் கொச்சி, தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பயணிகளின் விமானச் சேவையில் குறைபாடு இருந்ததால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதற்காக 2022 ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.