ஸ்ரீநகர்: பெரிய அளவில் சட்டவிரோத ஆட்கடத்தல் கட்டமைப்பு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பரவி, செயல்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
நாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 55 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இந்த மாதத் தொடக்கத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது. இதில், ஆட்கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய 44 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், அரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத ஆட்கடத்தல் கட்டமைப்பு பரவியிருந்ததும் அந்தப் பகுதிகளில் இருந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் இருந்து அகதிகளாகக் குடியேறியிருக்கும் ரோஹிங்கியா பெண்களைக் கடத்தி வந்து மணப்பெண்ணாக விற்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
இதுபற்றி பந்திப்போரா மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லக்சயா சர்மா கூறும்போது, “பங்ளாதேஷில் இருந்து ரோஹிங்கியா பெண்களைக் கடத்தி வந்து இந்தியாவின் காஷ்மீரின் வடக்குப் பகுதியில் கடத்தல்காரர்கள் விற்பனை செய்துள்ளனர்.
பெண்களைக் கடத்தி விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ரோஹிங்கியாவை சேர்ந்த மன்சூர் ஆலம் என்பவரும் ஒருவர். மன்சூர் என்பவர்தான் இந்த பெண்களைக் கடத்தி விற்பனை செய்வதில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்.
இதுபற்றி வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.