காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களைத் தவிர, மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கேதா மாவட்டத்தில் உள்ள பிலோதரா என்னும் சிற்றூரில் உள்ள கடை ஒன்றில் “கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா” என்கிற பெயரில் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்த மருந்து குறைந்தது 50 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மருந்தில் நச்சுத்தன்மை கொண்ட மெத்தில் ஆல்கஹால்’ என்கிற வேதிப்பொருள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த மருந்தை உட்கொண்ட பிலோதாரவை சேர்ந்த ஒருவரின் ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதில், மெத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேதா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் காதியா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணைக்காக கடைக்காரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.