புதுடெல்லி: காஸியாபாத் பகுதியில் அண்மையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவினாஷ் குமார், அனுராதா இருவரின் மணவிழா மருத்துவமனையில் நடைபெற்றது.
இவர்களின் திருமணத்தை நவம்பர் 27ஆம் தேதி நடத்த நிச்சயித்திருந்தனர் பெரியோர். ஆனால், நவம்பர் 25ஆம் தேதி மணமகனுக்கு உடல்நலம் குன்றியது.
டெங்கிக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருமணத்தைத் தள்ளிப்போட விரும்பினார் மணமகனின் தந்தை.
இதற்கிடையே, மணமகளும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்குச் சென்று அவினாஷைப் பார்த்தனர்.
இரு குடும்பத்தாரும் கலந்தாலோசித்து, நிச்சயிக்கப்பட்ட முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.
மருத்துவர்களும் ஒப்புதல் அளிக்கவே, மருத்துவமனை மணமேடையானது.
மருத்துவர்கள், தாதிகள் புடைசூழ மங்கலகரமாக நடந்தேறியது மண நிகழ்ச்சி.
“திருமணம் செய்துகொள்ள, குடும்பத்தோடு மருத்துவமனைக்குச் செல்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை,” என்கிறார் மணமகள் அனுராதா. இவர் தாதியாகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவினாஷ் குமாரின் உடல்நிலை தேறியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.