திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 36 வயது மாது ஒருவரை, அவருடன் இணைந்து வாழ்ந்துவந்த 75 வயது ஆடவர், கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
கேரளாவின் முகத்தாலாவில் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ண பிரசாத் என்ற அந்த ஆடவர், சத்வா என்ற அந்தப் பெண்ணுக்கு யோகா கற்பித்து வந்தார். அப்படியே இருவருக்கும் காதல் மலர்ந்து, ஒன்றாக வாழத் தொடங்கினர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் பகுதியில் ஒரு அடுக்குமாடி வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மூப்பு காரணமாக பிரசாத்துக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்தன. எனவே, சத்வாவை இஸ்ரேலுக்குப் போய்விடும்படி அவர் கூறியிருக்கிறார். சத்வா அதற்கு மறுத்து விட்டார்.
இதையடுத்து இருவரும் கூடிப்பேசி உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து கிருஷ்ணபிரசாத் அந்த மாதுவைக் கொலைசெய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவர், கழுத்தில் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், சத்வாவை சட்டப்படி மணமுடித்துள்ளதாக அந்த முதியவர் கூறியுள்ளார். மேலும் அந்த மாது வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரசாத் மீது கோட்டயம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.