பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 44 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதையடுத்து அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகளுக்கு வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டில் இதுபோன்று பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அப்போது நடந்த விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன், ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் செயலி ஒன்றின் உதவியுடன் அந்த மிரட்டல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோன்று இப்போது யாரோ ஏதோ ஒரு கைப்பேசிச் செயலி மூலம் இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர்.