உக்ருல்: மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்து 18.85 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பத்து பேர் அடங்கிய கும்பல் ஆயுதம் ஏந்தியவாறு அந்த வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாதபடி முகத்தை மூடியிருந்தனர்.
அந்தக் கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைவதற்கு முன்னர், பாதுகாவலர்களைத் தாக்கினர். பின்னர், வங்கி ஊழியர்களைக் கயிறுகளால் கட்டி கழிவறைக்குள் வைத்துப் பூட்டினர்.
வங்கி மேலாளரை மட்டும் துப்பாக்கி முனையில் மிரட்டி, லாக்கரைத் திறக்கச் செய்து அதில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினர், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.