திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவ நிறுவன பதிவுகளில் இல்லாத நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகள் விற்பனையாகி வருகிறது. இந்த போலி மருந்துகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறத்தொடங்கியுள்ளது.
இதைத் தடுக்கும் நோக்கில் அம்மாநிலத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் போல் உள்ள போலி மருந்துகள் தெலுங்கானாவில் விற்பனையாவது தெரியவந்தது. அதில் ஒரு மருந்து அட்டையில் உள்ள முகவரிக்கு அதிகாரிகள் சென்றனர்.
அங்கு போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அங்கிருந்து லட்சக்கணக்கான மருந்துகளை அவர்கள் கைப்பற்றினர்.
மேலும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 36 வகையான போலி புற்றுநோய் மருந்துகளை அவர்கள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட மருத்துகளின் மொத்த மதிப்பு ரூ.4.3 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி ஒருவரை அவர்கள் தேடி வருகின்றனர்.
இந்த மருந்துகள் நோயை குணப்படுத்துவதில் தோல்வி அடைவது மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு பேரழிவு மற்றும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.