ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார்.
ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டியுடன் துணை முதல்வர் பத்தி விக்ரமார்காவுக்கும் அமைச்சர்களுக்கும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா, வயநாடு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது இதுவே முதல் முறை.
கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு முதல்வராக இருந்த கே.சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி அரசு ஆட்சியில் இருந்தது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்தின், கொண்டாரெட்டி பல்லி எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு தெலுங்கானா ராஷ்டிரி சமிதியில், அதாவது இப்போது உள்ள பாரத் ராஷ்ட்ர சமிதியில் இணைந்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து 2009ல் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 2014ல் சட்டமன்றத் தேர்தலிலும் வென்ற ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2017ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 2018ல் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில செயல் தலைவரானார். 2021ல் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்.
கோஷ்டி மோதல்களுக்கு பெயர் போன தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி, மூத்த தலைவர்களைச் சமாளித்து, கட்சியை திறம்பட நடத்திச் சென்றார்.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில், கோடங்கல், காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி. கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்றார். காமாரெட்டியில் பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டியிடம் தோல்வியைத் தழுவினார்.
ரேவந்த் ரெட்டியின் மனைவி கீதா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினர். இவர்களுக்கு நைமிஷா என்ற மகள் உள்ளார்.