புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று நான்கு நாள்களாகியும் அக்கட்சியின் தலைமை வெற்றி பெற்ற மாநிலங்களுக்கான முதல்வர்கள் பெயரை வெளியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் பக்கப் பதிவில், மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றும் முதல்வர்களை அறிவிக்காதது மர்மமாக இருக்கிறது.
ஏன் இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை. மூன்று மாநிலங்களுக்கு முதல்வர் யாரைத் தேர்வு செய்வது என்பது தெரியாமல் பாஜக பேரவை உறுப்பினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அந்த மாநில முதல்வரைத் தேர்வு செய்வது பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் தான் என்று சதுர்வேதி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வரைத் தேர்வு செய்ய ரகசிய கூட்டம்
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்கிற சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது கோட்டா பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரின் ரகசிய சந்திப்பு.
பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் லலித் மீனா என்கிற சட்டப் பேரவை உறுப்பினரைச் சக உறுப்பினர் ஒருவர் நகரத்துக்கு வெளியே உள்ள விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
ஏற்கெனவே 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள் அங்கிருந்த நிலையில், லலித் மீனா வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லலித் மீனாவின் தந்தை கட்சியிடம் புகார் தெரிவிக்கவே, அடுத்த நாள் லலித் மீனா மீண்டும் திரும்பியுள்ளார்.
இது குறித்து அம்மாநிலத்தின் பாஜக தலைவர், “யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. சட்டப் பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில்தான் உள்ளனர்.
“முதல்வர் யார் என்பது கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். கட்சியின் கவனிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகே அந்தக் கூட்டம் நடைபெறும்,” எனத் தெரிவித்துள்ளார்.