புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக குறைந்தது 141 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் ஆடவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து புகைக் குண்டு வீசியது குறித்து விளக்கம் கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அந்தப் பாதுகாப்பு குறைபாட்டுக்கு அரசாங்கம் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதே விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவது புதிதல்ல என்றபோதிலும் ஒரே கூட்டத்தொடரில் ஆக அதிகமாக மொத்தம் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
மக்களவையில் மொத்தம் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவற்றில் 290 பேர் ஆளும் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள்.
மேலவையிலும் மக்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் டிசம்பர் 18ஆம் தேதியன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து புகைக் குண்டு வீசியது தொடர்பாக ஐவர் மீது இந்திய காவல்துறை பயங்கரவாத குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
மக்களவையின் பாதுகாப்பு தமது பொறுப்பு என்று கூறிய மக்களவை சபாநாயகர் அதுகுறித்து ஆய்வு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
அத்துமீறல் குறித்து இந்திய உள்துறை அமைச்சு விசாரணை நடத்துகிறது.
இருப்பினும், அத்துமீறல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடு குறித்தும் உள்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
நடந்த அத்துமீறலை இந்திய அரசாங்கம் மிகக் கடுமையாகக் கருதுவதாகவும் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தி மொழி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த தேவையில்லை என்றார் அவர்.
இந்திய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மோடி தலைமையிலான அரசாங்கம் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி முக்கிய சட்டங்களை அமலாக்கக்கூடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறைகூறினார்.
நாடாளுமன்றத்தில் அமளி நீடித்து வருகிறது.