புதுடெல்லி: வட இந்தியாவின் பல மாநிலங்களில் பனி மூட்டம் கடுமையாக உள்ளது. அதையடுத்து டெல்லியில் மட்டும் 110 விமானச் சேவைகளும், 25 ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் டெல்லியிலும் பனிமூட்டம் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியானதாக நிலவும் என்று மத்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் கடும் குளிர்நிலை தொடர்வதால் தேசிய தலைநகருக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில நாள்களுக்கு அடர்த்திமிகு பனி மூட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
கடுமையான பனிமூட்டம் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். பரேலியில், பரேலி - சுல்தான்பூர் சாலையில் வேகமாக வந்த கனரக வாகனம் ஒரு வீட்டின் மீது மோதியது. ஆனால், உயிர்ச்சேதம் இல்லை.
டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமானநிலையத்துக்கு அருகில் காட்சித் திறன் நிலை 125 மீட்டர் தூரமாக பதிவு செய்துள்ளது.
சப்தர்ஜங்க் ஆய்வகத்தில் இது 50 மீட்டராக பதிவாகியுள்ளது என்றபோதிலும் நாட்டின் தலைநகரில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவால் சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.