கிளந்தான்: வெள்ளத்தடுப்பு திட்டங்கள், நிதி உதவி குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு மாநில மக்களின் நல்வாழ்வுக்குப் பயனளிக்கும் என்று கிளந்தான் மாநில அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் முகமட் நஸுருடின் தாவுத் கூறியுள்ளார்.
முன்னதாக, வெள்ள நெருக்கடியின்போது கிளந்தான் உட்பட மாநில அரசாங்கங்களுக்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனப் பிரதமர் அன்வார் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு அன்வார், 910.52 மில்லியன் ரிங்கிட் செலவிலான வெள்ளத் தடுப்புக்காக ஐந்து திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறினார்.
மலேசியாவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலம் வெள்ளப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 17,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மக்களுக்காக முதல் கட்டமாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும் என்று திரு அன்வார் கூறினார். இதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1,000 ரிங்கிட் கிடைக்கும். மேலும் இழப்புகளின் அடிப்படையில் கூடுதல் உதவி வழங்கப்படும் என்றும் திரு அன்வார் தெரிவித்தார்.
மழை குறைந்து வெள்ளம் வடிந்து வருவதால் பாதிப்புகள் குறைந்து வருவதாக ஊடகச் செய்திகள் கூறின. சனிக்கிழமை காலை நிலவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,385க்குக் குறைந்தது.
கிளந்தான் மாநிலத்தில் இரு ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன. ஆறு ஆறுகள் எச்சரிக்கை அளவைவிட அதிகமாக உள்ளன. மேலும் ஐந்து ஆறுகள் அபாய அளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களில் 14 புதிய கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார். .
ஞாயிற்றுக்கிழமை வரையில், மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என ‘மெட்மலேசியா’ வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 51 சுகாதார வசதிகளும் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். மொத்தம் 34 சுகாதார நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும், 16 சுகாதார நிலையங்கள் மாற்று வசதிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், ஒரு சுகாதார நிலையம் துண்டிக்கப்பட்டதால் செயல்பட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 24 அன்று தொடங்கிய வெள்ளத்தின் மூன்றாவது அலை திரெங்கானு மாநிலத்தில் 32 பள்ளிகளைப் பாதித்துள்ளது. ஐந்து பள்ளிகள் தற்காலிக இடமாற்ற மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளைச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஜனவரி 2ஆம் தேதி பள்ளி தொடங்கும்போது மாணவர்கள் சாதாரண உடையில் பள்ளிக்குச் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.