பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தங்களது சொத்துப் பட்டியல் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக தனது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ள நிதிஷ் குமார், மாடு, தங்க மோதிரம், டிரெட் மில் என ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை செயலகத் துறை இணையத் தளத்தில் நிதிஷ் குமார் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் குறித்த விவரம் பொதுமக்கள் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.
நிதிஷ் குமாரின் சொத்துப் பட்டியலில் ரூ.22,552 ரொக்கமாகவும் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.49,202ம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ரூ.11 லட்சத்தில் கார், ரூ.1.5 லட்சத்தில் தங்கம், வெள்ளி மோதிரங்கள், 13 மாடுகள், 10 கன்றுகள், உடற்பயிற்சி செய்வதற்கான டிரெட்மில், சைக்கிள், மைக்ரோவேவ் ஓவன் என அசையும் சொத்துகள் இருப்பதாகவும் டெல்லியின் துவாரகாவில் ரூ.14 லட்சத்துக்கு 2004ல் வாங்கிய ஒரே ஒரு குடியிருப்பு தற்போது ரூ.1.5 கோடி மதிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, நிதீஷ் குமார் தனது பெயரில் ரூ.75.53 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததாகத் தெரிவித்திருந்த நிலையில், இவ்வாண்டு, டெல்லியில் உள்ள வீட்டின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதே தனது சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது.