கவுகாத்தி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அசாம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த தனது பேருந்து மீதேறி அவர் உரையாற்றத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
“உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து உங்களை எல்லாம் நேரில் சந்தித்துப் பேசி, நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள விரும்பினேன்.
“ஆனால், மத்திய உள்துறை அமைச்சு அசாம் முதல்வரையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் அழைத்துப் பேசி மாணவர்கள் மத்தியில் நான் உரையாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
“ராகுல் காந்தி வந்தாரா? இல்லையா என்பது முக்கியமல்ல. உங்களுக்குப் பிடித்தமானவர்களின் பேச்சைக் கேட்க நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்களா என்பதுதான் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
இந்தியர்களைக் கண்மூடித்தனமாக கீழ்ப்படிய வைக்க பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய ராகுல், இது இந்த அசாமில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கல்லூரியிலும் பள்ளியிலும் நடக்கிறது என்றார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் தலைமையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது நடைபயணம் ‘பாரத் நீதி யாத்திரை’ என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது. மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக அரசு ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.
ஜோராபட்டில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை மேகாலயா-அசாம் எல்லையில் அமைந்துள்ள அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனுமதி வழங்கியிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், திடீரென்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்க மறுத்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
அசாம் மாநிலம், கவுகாத்திக்குள் ராகுல் காந்தியின் யாத்திரையை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதை அடுத்து, காவலர்களுடன் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
ஏராளமான தடுப்புகளை வைத்து ராகுல் காந்தியின் யாத்திரைக்கு காவலர்கள் தடை ஏற்படுத்தியதால், இதற்கான காரணத்தைக் கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து காவலர்களின் தடைகளைக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உடைத்தெறிந்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த ராகுல்காந்தி, “நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம். ஆனால் சட்டத்தை மீறமாட்டோம். நாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் தொண்டர்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். அசாமில் பாஜகவை தோற்கடித்து விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்,” என்று கூறினார்.
இதனிடையே தொண்டர்கள் கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டிவிட்டதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக அசாம் மாநில முதல்வர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வழிகாட்டு நெறிமுறைகளை ராகுல் மீறியதால் கவுகாத்தியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களைப் போராட்டம் நடத்த தூண்டியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜக அரசைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.