பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவருக்கு மத்திய அரசு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்தவர் கர்பூரி தாக்கூர். இதனால் ‘மக்களின் நாயகன்’ எனப் போற்றப்படுகிறார்.
பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஓதுக்கீட்டு முறையை தன்னுடைய பதவிக்காலத்தில் அமல்படுத்தியவர் என்ற பெருமையும் கர்பூரி தாக்கூருக்கு உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 26 மாதக்காலம் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
பீகாரில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்பது சாத்தியமற்றது என்று கருதப்பட்ட வேளையில் முதல்வராகி சாதனை படைத்தார் கர்பூரி தாக்கூர்.