கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் ராணிப்பூர் நகரில் விளையாட்டுத் திருவிழா நடந்து வருகிறது. இதில், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, பால் ஏற்றி வந்த வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் மூவர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சிக்கிம் பால் கூட்டமைப்பு என அந்தப் பால் வாகனத்தில் எழுதப்பட்டு இருந்தது என்றும் வாகனத்தின் ‘பிரேக்’ செயலிழந்து போனதால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவிழாவில் பல இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. ஆங்காங்கே மக்கள் கடைகளில் பொருள்களை வாங்கியபடியும் உணவு வகைகளை ருசித்தபடியும் இருந்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக இடம்பெற்ற தம்போலா எனப்படும் ஒரு வகை விளையாட்டைக் காண்பதற்காக பெரிய மைதானத்தில் மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர்.
அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, சனிக்கிழமை இரவு 7.20 மணிக்கு பால் ஏற்றி வந்த வாகனம் ஒன்று திடீரென அந்தக் கூட்டத்திற்குள் புகுந்தது.
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் மக்கள் மீது மோதியதில் ஆண்கள், பெண்கள் என பலர் சிக்கிக்கொண்டனர். சிலர் அலறியடித்தபடி ஓடினர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.