புனே: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகர மக்கள் அண்மையில் வித்தியாசமான காட்சி ஒன்றைக் காண நேரிட்டது.
அங்குள்ள முத்தா நதியின் மேற்புறமாக சுழல்காற்றைப்போல் கொசுக்கள் சுற்றிச்செல்வதை அவர்கள் கண்டனர்.
இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் அதைக் காணொளியாக எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் பலரது ஆர்வத்தையும் தூண்டிய அக்காணொளி குறித்து சமூக ஊடகத்தில் சிலர் சினம் தெரிவித்துள்ளனர்.
புனே நகரின் கேசவ் நகர், கராடி பகுதிகளில் ‘கொசு’ சுழல் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காணொளியில், அந்த நதிக்கரையில் கொசுக்கூட்டம் சுற்றிச் சுழன்று செல்வதைக் காணமுடிகிறது.
பொதுவாக பூச்சிகள் இனப்பெருக்க காலத்தில் இவ்வாறு கூட்டமாகப் பறப்பது இயல்பு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், நகர்ப்புறங்களில் இத்தகைய காட்சி அரிது என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து குடியிருப்பாளர்கள் பலரும் கொசுத்தொல்லை குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் கவலை தெரிவித்ததால் அந்த வட்டாரத்தில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.