லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள ககோரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த எரிவாயுக் கலன் வெடித்தது. இவ்விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.
லக்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஷிர். இவர் தனது குடும்பத்துடன் ஹதா ஹஸ்ரத் சஹாப் வார்டு பகுதியில் வசித்து வந்தார்.
அப்பகுதியில் புதன்கிழமை வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் வீட்டிலிருந்த எரிவாயுக் கலன் திடீரென வெடித்தது. இதனால் வீட்டின் மேற்கூரையும் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. மேலும், எரிவாயுக் கலன் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையும் தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் முஷிர், அவரது மனைவி ஹுஸ்னா பானோ, மருமகள்கள் ஹினா, ஹுமா, சாயா ஆகிய ஐவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. இதில் அஜ்மத், முஷிரின் மகள்கள் லகாப், இன்ஷா, அனம் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.