புதுடெல்லி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி ரஷ்ய ராணுவத்துக்கு ஆள் கடத்திய மர்ம இணையத்தளத்தை சிபிஐ அதிகாரிகள் முடக்கினர்.
சுற்றுலாவுக்குச் சென்ற வடமாநில இளைஞர்கள் சிலர் ரஷ்யாவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துவிடலாம் என நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் முகவர்களின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தற்போது உக்ரேனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாகப் போரிட்டுக்கொண்டிருப்பதாகக் கூறி கதறி அழும் காணொளியை வெளியிட்டிருந்தனர்.
தங்களை உதவியாளர் பணிக்காக அழைத்து வந்து ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்துவிட்டதாகவும் அவர்கள் புகார் கூறியிருந்தனர்.
இதனையடுத்து ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் முறையிட்டிருந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டது.
இதனிடையே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ரஷ்ய ராணுவத்துக்கு ஆள்கடத்தும் கும்பல்கள் குறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை இரவு ஒரே சமயத்தில் இந்தியாவின் 13 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையை முடுக்கிவிட்டனர்.
டெல்லி, திருவனந்தபுரம், மும்பை, அம்பாலா, சண்டிகர் ஆகிய பகுதிகளிலும் தமிழ்நாட்டின் மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் மத்திய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் இறங்கினர்.
அப்போது, லட்சக்கணக்கில் ரொக்கம், ஆவணங்கள், மடிக்கணினி, கைப்பேசிகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவர்களது விசாரணையில், ஒரே இணையத்தளத்தின் கீழ் ஒரு கும்பல் செயல்பட்டு வந்ததும் அவர்களைப் புதுடெல்லியின் கேஜி மார்க் பகுதியில் இருந்து செயல்படும் ஆர்ஏஎஸ் ஓவர்சீஸ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் இயக்குநர் சுயாஷ் முகுத் என்பவர் ஒருங்கிணைத்து வந்ததும் தெரியவந்தது.
இவருடன் பஞ்சாப் மாநிலம், துபாய் நாட்டைச் சேர்ந்த சிலரின் உதவியோடு இந்தியா முழுவதும் செயல்படும் கட்டமைப்பு ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் முதலில் யூடியூப், சமூக ஊடகங்கள் வழி தூண்டிலிட்டு இளைஞர்களை கவர்கின்றனர். பின்னர் அவர்களிடம் வெளிநாட்டில் மதிப்பான வேலை, லட்சக்கணக்கில் ஊதியம் என்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆட்கடத்தலுக்கு ஆளாக்குவது தெரியவந்தது.
பணத்துக்கு ஆசைப்படும் இளைஞர்கள் முகவர்கள் வாயிலாக ரஷ்யாவுக்கு போர்ப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ரஷ்ய ராணுவனத்தினரோடு இணைத்து உக்ரேனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வெளியில் தெரியும் இந்த ஆளெடுப்பு முகவைகளுக்கு அப்பால் பஞ்சாப் மற்றும் துபாயிலிருந்து இயங்கும் மர்ம இணையத்தளம், இந்திய இளைஞர்களை ரஷ்ய ராணுவம் உள்ளிட்ட விபரீதமான வேலைகளுக்கு அவர்களின் அனுமதியின்றி அனுப்பி வைக்கின்றன.
தாங்கள் ஆட்கடத்தலுக்கு ஆளாகியிருப்பதை காலம் கடந்த பின்பே இளையர்கள் உணர்ந்து துடிக்கின்றனர்.
ஆள் கடத்தலுக்கு ஆளானவர்கள் ரஷ்யாவைத் தவிர, இதர நாடுகளுக்கு அனுப்பப்பட்டது தொடர்பான புகார்கள் குறித்தும் சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது.