மாலத்தீவு: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாலத்தீவுக்கு மருத்துவ உதவிகளையும் மனிதாபிமான சேவைகளையும் வழங்குவதற்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது.
அவற்றை அந்நாட்டில் பராமரிப்பது, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் ஏறக்குறைய 90 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த வீரா்களை மீட்டுக்கொள்ளும்படி சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசை வலியுறுத்தியதை அடுத்து, இந்தியா-மாலத்தீவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர், “இவ்வாண்டு மே 10ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் அனைவரும் திரும்ப மீட்டுக்கொள்ளப்படுவார்கள். மாா்ச் 10க்குள் இந்திய வீரா்களின் முதல் குழு மாலத்தீவில் இருந்து வெளியேறும்,” என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.
அதேவேளையில், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள், விமானம் ஆகியவற்றை பராமரித்து இயக்கும் வகையில் இந்திய ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்புவதற்கும் மாலத்தீவு ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க ராணுவத்தினர் அல்லாத 26 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பிவைத்தது.
இந்நிலையில், மாலத்தீவு ஊடகம் திங்கட்கிழமை வெளியிட்ட தகவலில், “மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறியுள்ளது. அட்டு நகரில் இருந்த அந்தக் குழு இந்தியா திரும்பியுள்ளதாக மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது,” என தெரிவித்திருந்தது.
எனினும் இந்தத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.
கடந்த வாரம் மாலத்தீவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அதிபா் மூயிஸ், “மாலத்தீவிலிருந்து வெளியேறுவதாகக் கூறும் இந்திய ராணுவ வீரா்கள் சாதாரண உடையில் திரும்பி வந்து பணியாற்றி வருவதாகக் கூறுகிறாா்கள்.
“மே 10ஆம் தேதிக்குப் பிறகு மாலத்தீவில் ராணுவ உடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இந்திய ராணுவத்தினா் வசிக்கமாட்டாா்கள் என்பது தெள்ளத் தெளிவு,” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அட்டு நகரில் இருந்த 25 இந்திய வீரர்கள் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்தபின்னர் அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்,” என்றார்.
“இருதரப்பும் ஒப்புக்கொண்டபடி இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறியுள்ளனர். மாலத்தீவு இந்தியாவுக்கு அளித்த ஹெலிகாப்டர்களை இனி இந்தியாவின் சிவில் வல்லுநர்கள் இயக்குவார்கள்,” என்றார்.
மாலத்தீவில் இருக்கும் ராணுவ வீரர்கள் இன்னும் இரண்டு முறைகளாக மே 10ஆம் தேதிக்குள் அங்கிருந்து இந்தியா திரும்புவார்கள் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.