திருப்பதி: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா 3வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று மாலை மலர் தகவல் தெரிவித்தது.
ரோஜா, 1999ல் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 2011ஆம் ஆண்டில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
2014ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ரோஜாவுக்கு தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் அந்த தொகுதியில் ரோஜாவிற்கு வரவேற்பும் கிடைத்தது.
அந்த தேர்தலில் 73 ஆயிரத்து 924 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிமுத்து கிருஷ்ணம்மா என்பவரை 858 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தொகுதி மக்களிடம் மேலும் பெயர் பெற்றார்.
இதனால் 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டி அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
2வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா அந்த தேர்தலில் 80,333 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலிபானு பிரகாஷ் என்பவரை 2,708 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வீழ்த்தினார். இதனால் ரோஜாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவரும் ரோஜாவுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது. அவர் தொகுதி மாறிவிடுவார், எம்.பி.தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
அதையெல்லாம் தாண்டி 3வது முறையாக நகரியில் நடிகை ரோஜா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த முறையும் அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலிபானு பிரகாஷ் போட்டியிடுகிறார்.