கௌகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபருக்கியையும் அவருடைய கூட்டாளிகளில் ஒருவரையும் அசாம் மாநிலக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 20) கைது செய்தது.
அண்டை நாட்டில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தின் துப்ரி வழியாக இந்தியாவிற்குள் நுழையக்கூடும் என்று தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அவர்கள் இந்தியாவில் நாச வேலைகளை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
ரகசியத் தகவலை அடுத்து, ஃபருக்கியையும் அவருடைய கூட்டாளியையும் கண்டுபிடித்துக் கைதுசெய்ய, காவல்துறை சிறப்புக் குழுவை அமைத்தது.
அவர்கள் இருவரும் அனைத்துலக எல்லையைக் கடந்து, துப்ரியின் தர்மசாலா நிலையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த காவல்துறை அவர்கள் இருவரையும் கைதுசெய்து, கௌகாத்திக்கு அழைத்துச் சென்றது.
அவர்கள் இருவரும் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.