பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 233 வட்டப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, வறட்சி, நிவாரணப் பணிக்காக கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக மாநில அரசு கேட்டிருந்த தொகையைவிட மிகக்குறைவாகும்.
இந்நிலையில், வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே சிவக்குமார், அமைச்சர்கள் சனிக்கிழமை சட்டமன்றத்திற்கு முன்பு குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டசபை வளாகத்திற்கு வெளியே திரண்ட அனைவரும் கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.