ஸ்ரீநகர்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட இருக்கிறது.
ஒன்றியப் பகுதியான லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள வாஷி என்ற சிற்றூரில்தான் தேர்தல் ஆணையம் அந்த வாக்குச்சாவடியை அமைக்கவுள்ளது.
இது குறித்து லடாக் தலைமைத் தேர்தல் அதிகாரி மரல்கர் கூறுகையில், “நூறு விழுக்காடு வாக்குகளை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு அருகே வாக்குச்சாவடிகளை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வாக்குச்சாவடி அமையவிருக்கிறது,” என்றார்.
லடாக் நாடாளுமன்றத் தொகுதிக்கு மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடக்கவிருக்கிறது.
வாஷியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரில் ஐந்து பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் வாழும் பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் வீட்டு வாசல் அருகே கொட்டகையில் வாக்குச்சாவடி அமையவிருக்கிறது என்று மரல்கர் குறிப்பிட்டார்.