மைசூரு: முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகா, சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்.பி.யுமான மறைந்த வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத்தின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத், 77, வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஏப்ரல் 29) காலமானார்.
இதையடுத்து, மைசூரு, சாமராஜ்நகர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்தது.
இதுபற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்,” என்றார்.
பிரசாத்தின் மறைவையொட்டி பிரதமர் மோடியும் தன்னுடைய இரங்கல்களை அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொண்டார்.