புதுடெல்லி: மாட்டிறைச்சி விற்றதாகக் குற்றஞ்சாட்டி விவசாயி ஒருவரது வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கும்பல் ஒன்று, இரட்டைக்கொலைகளைச் செய்ததுடன் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமத் சௌஹான், அயன் சவுகான், வினய், ஜெய் பகவான் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்து ஹரியானா சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
அத்துடன், குற்றவாளிகளுக்குத் தலா ரூ.8.20 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
ஹரியானாவின் டிங்கர்கேரி கிராமத்தில் கடந்த 2016, ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளிகள் என கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரிதிலும் அரிதான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இப்போது நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.