டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக கடந்த மூன்று நாள்களில் ஐவர் மாண்டுவிட்டனர். ஆகக் கடைசியாக 28 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார்.
ஆதி கைலாசத்தை ஹெலிகாப்டரில் சென்று பார்க்க பக்தர்களுக்காக வழங்கப்பட்ட சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் காரணமாக நைனி-சைனி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆல்மோரா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற துனாகிரி கோயிலுக்குச் செல்லும் பாதையை தீ சூழ்ந்துகொண்டதால் அக்கோயிலிலிருந்து பக்தர்கள் தப்பி ஓடினர்.
பக்தர்கள் பதற்றத்தில் அலறிக்கொண்டு தப்பி ஓடும் காட்சிகளைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
பக்தர்கள் தப்பிச் செல்ல வனத்துறை அதிகாரிகளும் கோயில் குருக்கள்மார்களும் உதவினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருவதாக உத்தராகண்ட் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.