பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
‘‘சிறப்பு புலனாய்வு குழுவினர் சுதந்திரமாக விசாரிக்கின்றனர். எனவே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படாது’‘ என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு பிரஜ்வல் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாச காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாசன் தொகுதி எம்.பி.யான 33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் களமிறங்கியுள்ளார். பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.