புதுடெல்லி: விமானப்படை அதிகாரி ஒருவர்க்கு ‘எய்ட்ஸ்’ தொற்றியதற்கு இந்திய விமானப்படையும் இந்திய ராணுவமுமே பொறுப்பு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த அதிகாரிக்கு ரூ.1.54 கோடி (S$253,500) இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2002 ஜூலையில் எல்லையில் பணியாற்றியபோது அவ்வதிகாரி காயமுற்றார். அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘எய்ட்ஸ்’ தொற்றை ஏற்படுத்தக்கூடிய ‘எச்ஐவி’ கிருமி இருந்த ரத்தத்தை ஏற்றியதாகச் சொல்லப்பட்டது.
அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2014ஆம் ஆண்டில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் மருத்துவக் குழு விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.
ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தமே அவ்வதிகாரியை எச்ஐவி கிருமி தொற்ற காரணம் என்று மருத்துவக் குழு கண்டறிந்தது.
இச்சம்பவத்திற்கு இந்திய விமானப் படைக்கும் இந்திய ராணுவத்திற்கும் சமப் பொறுப்பு உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஆறு வாரங்களுக்குள் இழப்பீட்டையும் நிலுவைத்தொகை உள்ளிட்ட மற்ற பலன்களையும் அவ்வதிகாரிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.