திருவனந்தபுரம்: துபாயில் இந்திய ஆடவர் ஒருவரைப் பாகிஸ்தானியர் மூவர் கடத்திச் சென்று கொன்று புதைத்தனர்.
அவர்களில் இருவர் பிடிபட்டுவிட்டனர். இன்னொருவர் தலைமறைவாகிவிட்டார்.
கேரள மாநிலம், பேரூர்கடா பகுதியைச் சேர்ந்தவர் அனில் வின்சென்ட். துபாயில் வேலைசெய்து வந்த அவரை 2024 ஜனவரி 2ஆம் தேதிமுதல் காணவில்லை.
இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி அனிலின் உடலைக் காவல்துறை கைப்பற்றியது.
சேமிப்புக் கிடங்கு ஒன்றில் வைத்து அனிலைக் கொன்று, பின்னர் அவரது உடலைப் பாலைவனத்தில் புதைத்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. குற்றஞ்சாட்டப்பட்டோரில் அவருடன் பணிபுரிந்தோரும் அடங்குவர்.
துபாயில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக அனில் பணிபுரிந்து வந்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ளோரில் ஒருவருடன் சேர்ந்து சேமிப்புக் கிடங்கில் சரக்கிருப்புக் கணக்கெடுப்பதற்காகச் சென்ற பிறகு அவர் மாயமானார்.
அனிலின் சகோதரர் பிரகாஷும் அதே நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். பிரகாஷ் சொல்லியே அவர் சரக்கிருப்புக் கணக்கெடுப்பதற்காகச் சென்றதாகக் கூறப்பட்டது.
இதில் இன்னோர் அதிர்ச்சி என்னவெனில், தன் சகோதரர் மாயமானது குறித்து பிரகாஷ் காவல்துறையில் புகாரளித்தபோது, குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவரும் அவருடன் இருந்தார்.
பின்னர் அவர் தலைமறைவானபோது காவல்துறை அவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்தது.
அனிலின் உடலை மறைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் பாகிஸ்தானுக்குத் தப்பிவிட்டார்.
தனிப்பட்ட பகை காரணமாக அனிலை அவர்கள் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
மீட்கப்பட்ட அனிலின் உடல் கேரளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்குப்பின் எரியூட்டப்பட்டது.